
மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் மரபணு வளங்களைப் பாதுகாக்க மரபணு வங்கி விரிவுப்படுத்தப்படும் என்று அறிவித்தார். எதிர்கால சந்ததியினருக்கு மரபியல் வளங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மரபணு வங்கி என்பது பல்வேறு தாவர இனங்களிலிருந்து சேகரிக்கப்படும் விதைகள், மகரந்தம் போன்ற மரபுப் பொருட்களைச் சேமித்து வைக்கும் களஞ்சியமாகும். இது எதிர்கால சந்ததியினருக்கு முக்கிய தாவர வகைகளைப் பாதுகாத்து வைக்க உதவுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய தாவர மரபணு வளங்கள் பணியகம் சார்பில் இந்தியாவின் முதல் மரபணு வங்கி 1996 ஆம் ஆண்டில் புது தில்லியில் அமைக்கப்பட்டது. இந்த வங்கி முக்கிய பயிர்களின் மூலக்கூறுகளை சேகரிக்க நாடு முழுவதும் 12 மண்டலங்களில் துணை நிலையங்களைக் கொண்டுள்ளது. இவை ஆராய்ச்சி, பாதுகாப்பு மற்றும் பயிர் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவின் வேளாண் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க 2025-26 பட்ஜெட்டில் இரண்டாவது தேசிய மரபணு வங்கி நிறுவப்படுவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இரண்டாவது தேசிய மரபணு வங்கி நிறுவப்படுவதன் மூலம், உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பில் இந்தியா முன்னோடியாகத் திகழ்வது உறுதி செய்யப்படும். இந்தப் புதிய வசதி இந்தியாவின் விலைமதிப்பற்ற தாவர மரபணு வளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச பல்லுயிர் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும். குறிப்பாக சார்க் மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு உதவிகளை வழங்கும்.