
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் நிர்வாக விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து ரூ.57.97 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதல் எத்தனால் விநியோகம் செய்பவர்களுக்கு விலை நிலைத்தன்மை, ஆதாய விலை ஆகியவற்றை வழங்குவதில் அரசின் தொடர்ச்சியான கொள்கைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியை சேமிக்கவும், உகந்த சுற்றுச்சூழலுக்கும் உதவும். கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கடந்த காலங்களைப் போலவே, சரக்கு மற்றும் சேவை வரி, போக்குவரத்து கட்டணங்கள் தனியாக செலுத்தப்படும். அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவு எத்தனால் விலையை 3% அதிகரிப்பது அதிக அளவிலான கலப்பு இலக்கை அடைய போதுமான அளவு எத்தனால் கிடைப்பதை உறுதி செய்யும்.
எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் எண்ணெய் நிறுவனங்கள், எத்தனால் கலப்பு பெட்ரோலை 20% வரை விற்பனை செய்கின்றன. மாற்று மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. எரிசக்தி தேவைகளுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கவும், வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கவும் இந்த நடவடிக்கை முயல்கிறது. கடந்த பத்தாண்டுகளில் (31.12.2024 நிலவரப்படி), பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் விளைவாக சுமார் ரூ.1,13,007 கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்கின்றன. சுமார் 193 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கச்சா எண்ணெய் மாற்றீடு ஏற்பட்டுள்ளது.