பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்ந்து 6 மாநிலங்களும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தையும் சேர்ந்த 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு 2025 அக்டோபர் 6 அன்று தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2025 அக்டோபர் 9 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவின்படி, சமூக ஊடகங்கள் உட்பட மின்னணு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன், அவை கட்டாயமாக ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் (MCMC) அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதலின் படி, மாநில மற்றும் மாவட்ட அளவுகளில் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் முன் சான்றிதழ் இல்லாமல், சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களின் மூலம் எந்த அரசியல் கட்சி அல்லது வேட்பாளரும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பணம் கொடுத்து செய்தி வெளியிடும் சம்பவங்கள் கண்டறியப்பட்டால், அவை கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அதேபோல், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் போது, தங்களது சமூக ஊடக கணக்குகளின் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 77(1) மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, சமூக ஊடகங்கள் உட்பட இணையதளங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் விளம்பரங்களுக்கான செலவின விவரங்களை, தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
