
நிதி ஆயோக், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமத்துடன் (NCAER-என்சிஏஇஆர்) இணைந்து, சுமார் 30 ஆண்டு காலத்திற்கான (அதாவது 1990-91 முதல் 2022-23 வரை) சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள், ஆய்வு அறிக்கைகள், ஆவணங்கள், மாநில நிதி நிலை குறித்த வல்லுநர்களின் கருத்துகள் ஆகியவை அடங்கிய விரிவான களஞ்சியமாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி புதுதில்லியில் “நிதி- என்சிஏஇஆர் மாநிலங்கள் பொருளாதார மன்றம்” இணையதளத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த தளம் நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது – அதாவது:
1) மாநில நிதிசார் சூழல் அறிக்கைகள்
2) தரவு களஞ்சியம் – ஐந்து பிரிவுகளில் அதாவது மக்கள்தொகை; பொருளாதார அமைப்பு, நிதி, சுகாதாரம், கல்வி ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்கள் இடம்பெறும்.
3) மாநில நிதி- பொருளாதாரத் தகவல் பலகை
4) ஆய்வுத் தகவல் – நிதி மேலாண்மையின் முக்கிய அம்சங்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் இது அமையும்.
பேரியல் பொருளாதாரம், நிதி, மக்கள்தொகை, சமூக-பொருளாதார போக்குகளைப் புரிந்துகொள்ள இந்த தளம் உதவும். இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு எளிதில் தகவல்களை வழங்கும். இந்த தளம் ஒரு விரிவான ஆராய்ச்சி மையமாகவும் செயல்படும். ஆழமான ஆராய்ச்சி ஆய்வுகளுக்கான தரவு, பகுப்பாய்வு அம்சங்களை இது வழங்கும். இது ஒரு மத்திய தகவல் களஞ்சியமாகச் செயல்படும். கடந்த 30 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, நிதி குறியீடுகளின் விரிவான தரவுத்தளத்தை அணுகவும் இத்தளம் உதவியாக இருக்கும்.
-PIB