குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (24 ஜூலை 2026) புக்காரெஸ்டில் நடைபெற்ற இந்திய-ருமேனிய வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ருமேனிய அதிபர் திரு. நிகுசோர் டான், ருமேனிய அரசுப் பிரதிநிதிகள், இந்தியா மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஐரோப்பாவின் சந்திப்புப் புள்ளியில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம், உயர் திறன் கொண்ட மனித வளம், மேம்பட்ட தொழில் திறன்கள் மற்றும் ஐரோப்பிய யூனியனுடனான வலுவான ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ருமேனியா, இந்தியாவுக்கு ஒரு இயல்பான மற்றும் மதிப்புமிக்க கூட்டாளியாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். ருமேனியா முதலீட்டிற்கான ஒரு முக்கிய இடமாக மட்டுமல்லாமல், பரந்த ஐரோப்பிய சந்தைக்கான நுழைவாயிலாகவும் செயல்படுகிறது. இந்த மன்றத்தில் இந்திய வணிகக் குழுவினர் பெருமளவில் பங்கேற்றிருப்பது, ருமேனியா வழங்கும் வாய்ப்புகள் மீது இந்தியத் தொழில்துறையினருக்கு ஏற்பட்டுள்ள வளர்ந்து வரும் நம்பிக்கையையும், ருமேனிய வணிக நிறுவனங்களுடன் நீடித்த கூட்டாண்மையை உருவாக்க அவர்கள் கொண்டுள்ள விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
தற்போதைய கூட்டாண்மையில் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை மையப் பங்கு வகிக்கின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். சுமார் 200 கோடி மக்கள் தொகை மற்றும் 25 டிரில்லியன் டாலர் பொருளாதார அளவு கொண்ட இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலகின் மிக முக்கியமான பொருளாதாரக் கூட்டணிகளில் ஒன்றாகும். இது வர்த்தக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு ஓட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் உறுதியான, பன்முகத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்துவது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
