மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ‘ராஷ்ட்ரிய பால் ஸ்வாஸ்திய காரியக்கிரம்’ (RBSK 2.0) திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது 38 பொதுவான குழந்தைகள் சுகாதாரப் பிரச்சனைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட இந்த வழிகாட்டுதல்களில், குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றா நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனநலக் கோளாறுகள் மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சனைகள் போன்ற புதிய சுகாதார முன்னுரிமைகளும் உள்ளடங்கும்.
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளைப் பரிசோதிப்பதற்காக, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் மொபைல் சுகாதாரக் குழுக்கள் கூடுதல் மனிதவளத்துடன் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளுக்காக டிஜிட்டல் தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வாழ்க்கை முறை சார்ந்த சுகாதாரப் பிரச்சனைகள் குறித்து குழந்தைகளிடையேயும் பெற்றோர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு பொருட்கள் உருவாக்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி. அனுபிரியா படேல் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
