தமிழ்நாட்டில் வணிக ரீதியான சமையல் எரிவாயு ஒதுக்கீடு மூல நிலையிலிருந்து 70 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் Indian Oil Corporation (ஐஓசிஎல்) தலைவர் ஏ. எஸ். சஹானி இன்று (10.04.2026) அறிவித்தார்.
மாநிலத்தின் எரிபொருள் நிலையை ஆய்வு செய்த பிறகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுத்திகரிப்பு திறன் முழு அளவில் செயல்பட்டு வருவதால் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் உள்ளிட்ட திரவ எரிபொருட்களின் விநியோகத்தில் எந்த சிக்கலும் இல்லை என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.
தமிழ்நாட்டின் தினசரி சுமார் 5 லட்சம் சிலிண்டர்கள் என்ற சமையல் எரிவாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்ய எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தயாராக உள்ளன என்றும், வீட்டு உபயோக எரிவாயுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். சில பகுதிகளில் காணப்படும் 6 முதல் 8 நாட்கள் வரை உள்ள காத்திருப்பு காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு எந்தவித தடையும் இல்லாமல் முழுமையான விநியோகம் நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
சென்னை புறநகர் பகுதிகளில் 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அவர், விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளைக்குள் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பதுக்கல் மற்றும் முறைகேடுகளை தடுக்க மாநில அரசு 10,000-க்கும் மேற்பட்ட திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் முன்அறிவிப்பின்றி 1,500-க்கும் மேற்பட்ட சோதனைகளை மாநிலம் முழுவதும் நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதிய கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதால், எரிபொருள் பற்றாக்குறை குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கையிருப்பு, விநியோகம் மற்றும் அணுகல் ஆகியவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், பாரம்பரிய சிலிண்டர்களுக்கு மாற்றாக குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டிற்கு மாறுமாறு வாடிக்கையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். இது சுத்தமானதும், குறைந்த செலவிலானதும், எளிதில் கிடைக்கக்கூடியதுமான எரிபொருள் எனவும் அவர் விளக்கினார்.
